இரு பார்வைகளின் கதை..

0
1129

பார்வைகள் மாறியது ஏன்?
பார்க்கும் விதத்தின் அர்த்தங்கள்
மாறியது ஏன்??

உன் பார்வையில்  நானோ!!!

தொலைதூரம் பயணிக்கும்
ஓர் உயிர் ஆவேன்… என்னுள்..
உன் உருவம் வெறும் உருவமாய் மட்டுமே
கிறுக்கப்பட்டிருக்கும்..
நினைவுகள் எனும் இறுதி வேரும்
மறதியை எட்டத்தொடங்கியிருக்கும்..
காயங்கள் எனும் கேள்விகளிற்கு
நேரமே பதிலாய் கிடைத்திருக்கும்..
உன் பிரிவின் வலியும்
புன்னகையால் கடக்கப்பட்டிருக்கும்..
என் கண்ணீரின் கடைசித்துளியும்
மாறுதலை நோக்கிக் கைகாட்டிருக்கும்..

ஆனால் என் பார்வையிலோ!!

என் முழு நிலவும் நீ ஆவாய்..
விழி காணா காற்றைப்போல்
இன்றும் உன் விரல்களை பிடித்து
பயணம் செய்கிறேன் ..
மழலையை ரசிக்கும் தாயைப்போல்
உன் உருவ கிறுக்கலை
தினம் தினம் ரசிக்கிறேன்..
பூக்களை முத்தமிடும் வண்டைப்போல்
நினைவுகளை  தீண்டித் தீண்டி
உனை சுவாசிக்கிறேன்..
வெறும் முகமூடியைப்போல்
பிரிவின் வலியை கடந்து சிரிக்கிறேன்..
இறுதியில் என்னைப்போல்
என் கண்ணீர்த்துளியும் உனை
மறக்க நினைக்கையில் மனதின்றி மாறுகிறது..

நிலவே மரணத்திலும்
உன்னுடன் வருவேன்
உனை தவற விட்ட காதலாக…
மறு ஜென்மத்திலாவது நம் காதல் பூ
அழகாய் பூக்கட்டும்…
கற்பனை எனும் தோட்டத்தை விட்டு
நிஜம் எனும் தோட்டத்துள்….

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க