கடிதங்களை மறந்தது ஏனோ??

0
839
20200524_111231

நவீன உயிர்களே
ஒருமுறை நின்றாலென்ன..
உலகயே தலைகீழாய் மாற்றும்
உன் கைபேசியைக் கொஞ்சம் தள்ளி வைத்தாலென்ன..

கடிதங்கள்..
வெறும் கடிதங்கள் அல்ல..
அவை பல கோடி உயிர்களின்
சுமைதாங்கி
இதயங்களின் குமுறலை பிரதிபலிக்கும்
அழகிய கண்ணாடி..

சில இதயங்கள் நினைத்தால்
ஒரு காகிதமும் கடிதமாகும்..
சில இதயங்கள் மரணித்தால்
ஒரு கடிதமும் காகிதமாகும்..

எழுத்துக்கள் எனும் இதழ்கள் சேர்ந்து
சொற்கள் எனும் பூக்கள் பூக்கும்..
சொற்கள்  எனும் பூக்கள் சேர்ந்து
வசனங்கள் எனும் மாலையாகும்…

இம்மாலையாவும் தனக்குத்தானே
ஆயிரம் கதைகள் கூறி பேனா முனைகளுக்கு
விடை கொடுக்கும்…
கடிதங்கள் எனும் மடலாய் மாறி
தபாலகம் நோக்கி நடைபோடும்…
அதில் ஒரு கூட்டம் சிறுகரை தாண்ட
மறுகூட்டம் பெருங்கடல் தாண்டும்..

பிரிவின் அர்த்தத்தை மொத்தமாய்
தன்னோடு சேர்த்து தபாற்காரனை
அணைத்துக்கொள்ள
தபாற்காரனும் அவற்றை
காவிக்கொண்டு ஊரைச்சுற்றுவான்…
இறுதியில் சேர வேண்டிய
கைகளைச் சென்றடையும்
ஓர்  உயிருள்ள சடப்பொருளாய்…..
இத்தனை சுகத்தையும் உணரா நவீன மனிதா
இறப்பதற்குள்
ஒரு கடிதத்தையாவது கிறுக்கி
அக் கிறுக்கலின் சுவையை சுவைத்துவிடு…

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க