ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 26

0
430

 

 

 

 

சில விபத்துக்கள்

தாக்குதல் காரணமாக ஈராக்கில் சாலைப்போக்குவரத்து கடுமையாக பாதித்திருந்த நாட்களில் பாதுகாப்பு காண்வாய் வரும்போது முகாமுக்கு அதிகமான சரக்குப்பெட்டக வாகனங்கள் வந்துவிடும். அதில் சில சரக்குப்பெட்டகம் முழுமையும் கோக் அல்லது பெப்ஸி மட்டுமே இருக்கும். இருபத்தி நான்கு அலுமினியக் குவளைகள் வீதம் அடுக்கப்பட்ட நூற்றிப்பத்து கேசுகளை ஒரு பெட்டியில் அடுக்கி பாலித்தீனால் பொதிந்து வண்டியில் ஏற்றுவார்கள், ஒரு வண்டியில் முப்பத்தியிரண்டு பட்டிகள் என மொத்தம் எழுபத்தி நான்காயிரத்தி ஐநூறு குவளைகள் இருக்கும். அப்படி ஒரு வண்டி நிறைய வரும் கோக்,பெப்சிகள் எங்களின் ஏழுநாள் தேவையை மட்டுமே பூர்த்திசெய்யும். அந்த வாகனங்களை நாங்கள் உடனே காலி செய்து மறுநாளே அனுப்பவேண்டும். அதிக எண்ணிக்கையில் அவற்றை இறக்கும்போது எங்களிடம் அவற்றை வைப்பதற்கு இடம் இல்லாமல் தற்காலிகமாக உணவுக்கூடத்தின் அருகில் சில நாட்கள் வைத்திருப்போம்.

அமெரிக்கர்கள் அனேகம்பேர் கோக் ,பெப்ஸி அதிகம் குடிப்பவர்கள் (சிலர் ஒரு நாளில் ஆறு வீதம்). குவளைகள் வெளியே இருப்பதால் ராணுவ வீரர்கள் சிலர் அவர்கள் குடியிருப்புக்குச் செல்லும்போது கையில் இருபத்திநான்கு குவளைகள் உள்ள ஒரு கேசை எடுத்துச் செல்வர். ஒருநாள் முருகன் என்னிடம் சொன்னான் “பாய் இவிங்க ரொம்ப நல்லவங்கனு சொன்னா. அங்க பாரு அவனுக்கு ஒன்னு , அவன் கேர்ள் பிரண்டுக்கு (அப்போது ஒரு ராணுவ வீரன் இரண்டு கேஸ் கோக்கை எடுத்துக் கொண்டிருந்தான் இருட்டில்) ஒன்னு. இரண்டும் போற போக்க பாரு, கோக் குடுத்தே அவள வளச்சிருப்பான் போல” .

 

 

 



திருடு போவதை தடுக்க நாங்கள் பொருட்கள் வைக்கும் எட்டடி உயரமுள்ள எங்களின் சரக்குப் பெட்டகங்களின் மேல், யாரும் எளிதில் எடுக்க முடியாதபடி, அவற்றை அடுக்கி வைத்தோம். ஒரு நாள் அவரசமாகத் தேவைப்பட்டபோது, நான் பீட்டரிடம் “போர்க் லிப்ட் பிளேடில் ஏறிக்கொள். நான் தூக்குகிறேன் மேலிருந்து சில கோக் கேஸ்களை எடு. அவசரமாக உணவுக்கூடத்திற்கு கொடுக்க வேண்டும்” என்றேன். “அது பாதுகாப்பற்றது என்னால் முடியாது” என்றான். போர்க்லிப்ட்டின் பிளேடில் நான் ஏறிக்கொண்டேன். மேலே தூக்கியதும் சரக்குப்பெட்டகத்தின் மேலிருந்து ஐந்தாறு கோக் கேசுகளை எடுத்து போர்க்லிப்ட்டில் அடுக்கிவிட்டு கிழே இறங்கும்போது கால்வைக்க கிடைத்த இடத்தில் நின்று கொண்டேன்.

கீழிறங்கும் போது எனது இடது கால், மேல்-கீழ் இயங்கும் இரு இரும்பு பட்டைகளுக்கிடையில் மாட்டிக் கொண்டது. பாதுகாப்பு காலனி (முன்பக்க இரும்பு தகடு பொருத்திய) அணிந்திருந்ததால் வேகமாக காலை இழுத்து வெளியே எடுத்துவிட்டேன். பெரிய காயம் இல்லை. இருந்தாலும் கடுமையான வலி. உடனிருந்தவர்கள் அடுமனையின் குளிர் பெட்டிகளிருந்து பனிக்கட்டிகளை கொண்டுவந்து ஒத்தடம் தந்தனர். பின்னர் எங்கள் முகாமில் உள்ள ராணுவ முதலுதவி மையத்துக்கு அழைத்துச் சென்றனர். காப்டன் வெஸ்ட் என்னும் நானறிந்த வயதான பெண்மணி அங்கிருந்தார். “ஹாய் ஷாகுல் என்னாச்சு” எனக் கேட்டு விட்டு என் கால்களை பரிசோதித்தார். “எக்ஸ் ரே எடுக்கவேண்டும். இங்கு அந்த வசதி இல்லை, ஈகிள் நெஸ்ட் என்னும் அருகில்(பதினாறு கிலோமீட்டர் ) உள்ள வேறு முகாமுக்கு செல்ல வேண்டும், நாளை காண்வாய் இல்லை. எனவே நாளை மறுநாள் காலை ஒன்பது மணிக்கு உன்னை அழைத்துச் செல்வார்கள். வலி மாத்திரை இது, தேவைபட்டால் எடுத்துக்கொள்” என சில மாத்திரைகளை தந்து அனுப்பிவைத்தார்.



இரவானதும் நல்ல வலியில் தூங்க இயலவில்ல. எழுந்தமர்ந்த போது பாதத்தை தரையில் ஊன்றி சரியாக நடக்கவும் முடியவில்லை. தூங்காத இரவுகள் எப்போதும் நீண்டவையாகி விடுகின்றன.மறுநாள் பணிக்கு செல்லவில்லை. அதற்கடுத்தநாள் காலையில் முதலுதவி மையம் அழைத்துச் சென்றனர். காப்டன் வெஸ்ட் என்னிடம் ஒருவரைக் காட்டி “இவர் உன்னுடன் இருப்பார் உனக்கு வேண்டியதை செய்து தருவார், ஹேவ் எ சேஃப் ஜர்னி” என கையசைத்து அனுப்பி வைத்தாள். ராணுவ மருத்துவ ஜீப்பில் என்னுடன் இரு நோயாளிகள் இருந்தார்கள். இருவரும் ராணுவ வீரர்கள் .

ஜீப்பில் ஏறி கதவை மூடியதும் கும்மிருட்டு சூழ்ந்துகொண்டது. இயந்திர சப்தம் மட்டும் சீரான ஓசையில் கேட்டுகொண்டிருந்தது.ஓட்டுனரின் தலைக்குபின் ஆறு அங்குல சதுர கண்ணாடி இருந்தது அதை சிறிது நேரத்திற்கு பின் திறந்ததும் கொஞ்சம் வெளிச்சம் வந்தபோதுதான் இருக்கிறோம் எனும் உணர்வு வந்தது ஒரு பெருமூச்சுடன். வெளியில் எதையும் பார்க்கமுடியவில்லை.பயணங்களில் எப்போதும் வெளியே வேடிக்கை பார்க்கும் குணம் எனக்கு. ஓடும் மரங்கள், முந்தி செல்லும் வாகனங்கள், கடைகள், தூரத்தில் தெரியும் மலைகள்,மனிதர்கள் என பார்த்துக்கொண்டே இருப்பேன். சலிப்பதே இல்லை. அந்த இருள் எனக்கு ஒரு ஒவ்வாமையையே தந்தது. அரண்மனைக்குள் வந்தபின் முதல் முறையாக வெளியே செல்கிறேன். உடன் இருந்தவர்கள் என்னிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு ராணுவ வீரர் இருமிக்கொண்டே இருந்தார் .

 

 

 

 


நாற்பது நிமிடப் பயணத்திற்குப்பின் ஈகிள் நெஸ்ட் முகாம் வாயிலில் சோதனைக்குப் பின் உள்ளே அனுமதிக்கப்பட்டோம். என்னை அழைத்துச் சென்ற ராணுவ வீரன் அங்கிருந்த ஒரு செவிலி உடையணிந்த பெண்ணிடம் என்னை ஒப்படைத்தார். “இவள் உனக்கான அனைத்து உதவிகளையும் செய்து தருவாள் .அனைத்தும் முடித்ததும் இங்கேயே காத்திரு” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார் . அந்த பெண் என் முந்தைய மருத்துவ வரலாறுகளையும்,மருந்து, ஊசிகளால் ஏதாவது ஒவ்வாமை உள்ளதா என கேட்டு குறித்து கொண்டாள்.பின்பு மருத்துவ அறைக்கு சென்றுவிட்டு சில நிமிடங்களுக்கு பின் வந்து என்னை உள்ளே அழைத்து சென்றாள் . உள்ளே சென்றதும் டிபானி எனும் பெயர்கொண்ட அழகான இளம் பெண் மருத்துவர் என்னை பெயர் சொல்லி அழைத்து முன்பே பழகியவரிடம் பேசுவதுபோல அன்பாக எப்படி அடிபட்டது என கேட்கும்போதே என் காலில் பாதி வலி குறைந்து விட்டது.மருத்துவர் டிபானியின் கையில் எனது விபரங்கள் அடங்கிய காகிதம் இருந்தது. “பயப்படாதே எக்ஸ்ரே எடுத்து பாப்போம்” என சொல்லிவிட்டு அருகிலிருந்த அறைக்கு அழைத்துச்சென்று எக்ஸ்ரே எடுத்து விட்டு வெளியில் காத்திருக்கச் சொன்னாள்.

மதிய உணவு வேளை நெருங்கியதும்.அந்த செவிலிப்பெண் என்னிடம் சாப்பிடுகிறாயா? என இரண்டு கைகளாலும் பர்கர் கடிப்பதை போன்ற சைகை காட்டி கேட்டாள். “ஆம்” என்றேன். இரண்டு பர்கரும்,கொஞ்சம் சிக்கன் விங்க்ஸும்,ஒரு தண்ணீர் பாட்டிலும் தந்தாள். தினமும் அங்கு வரும் நோயாளிகளுக்காக உணவுக்கூடத்திலிருந்து வரவழைக்கப்பட்டது. நம்ம ஆள்ட்ட சாப்ட்டச்சானு சைகையில் கேட்பது மிக எளிது .ஒரு கையால் சோறு தின்பது போல் காட்டினால் போதும் .நான் சாப்பிட்டபின் அங்கேயே அமர்ந்திருந்தேன். நெடுநேரத்திற்கு பின் மீண்டும் மருத்துவர் டிபானியின் அழைப்பு .

“எக்ஸ்ரேயில் காலில் ஒரு சிறிய கீறல் மட்டுமே உள்ளது. விரைவில் குணமாகிவிடும்.ஒரு வாரம் ஓய்வு தேவை,பணிக்கு செல்லவேண்டாம்,காலில் அணிய ஒரு மரக்கட்டை காலணி தருகிறேன் அணிந்துகொள் .விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்” என சொல்லி சிறிய வெண்பற்கள் வெளியே தெரியும்படி புன்னகையுடன்,கை குலுக்கி வழியனுப்பி வைத்தாள். “மிக்க நன்றி டாக்டர் டிபானி” என விடைபெற்றேன் .எப்போதும் பரபரப்பாக இயங்கிய எனக்கு பணிக்கு செல்லாமல் குளிரூட்டிய அறையில் முடங்கி கிடப்பது பெரும் தண்டனையாக இருந்தது . லோகேஷ் மூன்று வேளையும் உணவு கொண்டு தருவான். பகலில் தூங்குவதால்,இரவுகள் உறக்கமில்லாமல் கழிந்தது .ஐந்தாவது நாளே என்னால் இனி முடங்கி இருக்க இயலாது இயன்ற சிறு பணிகளை செய்கிறேன் என சென்றுவிட்டேன். விரைவிலேயே குணமடைந்துவிட்டேன்.

ஒருமுறை அடுமனையில் வேலைசெய்யும் சமையற்காரன் பெர்னான்டோ கூர்மையான கத்தியை கையில் வைத்து விளையாட்டாய் சுற்றும்போது மோதிரவிரலின் கீழே சதை துண்டாகி ரத்தம் பீச்சியடித்தது. ரத்தத்தை பார்த்த எங்கள் மேலாளர் ஆலன் குக் எதோ விபரீதம் என நினைத்துவிட்டார். உடனே ராணுவ ஹெலிகாப்டரை வரவழைத்து அவனை ஈகிள் நெஸ்ட் முகாமுக்கு அனுப்பிவைத்தார். அவன் அங்கு ஒருநாள் தங்கி சிகிச்சைபெற்று திரும்பி வந்தான் “விளையாட்டு வினையானது” என சிரித்துக்கொண்டே சொன்னான். எங்கூர்ல நாய் விளையாட்டு கூரையை பிய்க்கும் என சொல்வதுண்டு .

பராமரிப்பு பணியில் இருந்த ஒருவன் சுடுநீர் கொதிகலனை பழுதுபார்க்க திறந்தபோது எதிர்பாராமல் கொதிக்கும் நீர் அவன் உடல் முழுதும் கொட்டிவிட்டது. தலைக்கு கீழே வெந்து போய்விட்டது. அவன் முதலில் என்னுடன் திக்ரிதில் சிறிது காலம் பணிபுரிந்து வேறு முகாமுக்கு மாற்றலாகி சென்றிருந்தான். ஆபத்தான நிலைமையில் இருந்த அவனை முதலுதவி சிகிட்சை அளித்து ,அவனது உயிர் காக்க எங்கள் நிறுவனம் ஒரு சிறிய தனி விமானத்தை வாடகைக்கு அமர்த்தி பாக்தாத்திலிருந்து ஜோர்டானின் அம்மான் நகரம் கொண்டு சென்றது. அங்கு கிடைத்த உயர் சிகிச்சையில் அவன் பிழைத்துக்கொண்டான்.
தனி விமானம் என்பது மிக அதிக செலவு .அவன் வேறு நிறுவனத்தில் இருந்திருந்தால் ………நினைத்தே பார்க்க முடியாது.

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க