ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 28

0
586

 

 

 

 

தடைப்பட்ட பயணம்
 
ஈராக் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நேப்பாளிகள்  பனிரெண்டுபேரை படுகொலை செய்தபின், வேறு சிலரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். அதனால் இந்தியர்கள்,  ஈராக்கிற்கு பணிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.  இந்தத் தகவலை, எங்கள் முகாமின் அறிவிப்பு பலகையில் ஒட்டியிருந்தனர். அதனால் விடுமுறையில் செல்லும் யாரும் திரும்பி வர இயலாது என சொன்னார்கள். ஆனாலும் பல நிறுவனங்கள் துபாய் வழியாகவும், ஜோர்டான் வழியாகவும் பணியாளர்களை ஈராக்கிற்குள் கொண்டு வந்து கொண்டே இருந்தனர். இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம்  என் குடும்பத்தார் எனக்குப் பெண் பார்த்து நிச்சயம் செய்தார்கள். அக்டோபர் மாதம் ரமலான் நோன்பு காலம்.  அதன் பிறகு திருமணம் என முடிவு செய்தார்கள்.
 
 நான்  அக்டோபர் மாதம் இந்தியா செல்ல வேண்டுமென விண்ணப்பித்தேன்.  ரமலான் காலமாதலால்,  அதிக தாக்குதல்கள் இருக்காது என பலரும் கருத்து தெரிவித்தார்கள்.  ஆனால் ரமலான் மாதத் தாக்குதல்கள் பெரும் அச்சத்தை தந்தது. வழக்கத்தைவிட அதிக தாக்குதல் நடந்துகொண்டிருந்தது. எங்களுடன் இருந்த அதிகாரிகளுக்கு ஏழு வாரம் வேலையும் மூன்று வார விடுமுறையும் என எங்களது நிறுவனம்  அறிவித்தது. அவர்கள் அடிக்கடி ஊருக்குப் போய் வருவதுபோலிருக்கும். அதிகாரிகள் அல்லாத பணியாளர்களாகிய எங்களுக்கு ஆறுமாதங்களுக்குப் பின் மூன்று வாரம் விடுமுறை என இருந்தது. நான் இரண்டாவது முறை சென்றபோது விடுமுறை வருடத்திற்கு ஒருமுறை என்றாகியது. மொத்தம் முப்பத்திரண்டு முகாம்களில் உள்ளவர்களை கடும் தாக்குதல்களுக்கிடையில் விடுமுறைக்காக ஈராக்கிலிருந்து அனுப்புவதும், பின்னர் உள்ளே கொண்டு வருவதற்குமான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது மிக சிரமமாக இருந்ததால்,  வருடத்திற்கு ஒருமுறை ஒரு மாதம் விடுமுறை என நிர்வாகம் மாற்றியமைத்தது .
 
 அப்போது தாக்குதல்கள் அதிகமாக இருந்தபடியால் பலருக்கும் சரியான நேரத்தில் விடுமுறைக்கு செல்ல இயலவில்லை. சிலரை சிறப்பு வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள . அப்போது பாக்தாத் விமான நிலையம் ஒரு தனியார் நிறுவனத்தால் செயல்படத் தொடங்கியிருந்தது. ஆனாலும் பாக்தாத் வரை சாலையில் பயணித்து அங்கு சென்று சேர்வது பெரும் சவால். சாலை  பயணம் மிக கடினமாகியிருந்த நாட்கள் அது .

 

 

 

 

 

 


 
அக்டோபர் இருபத்தைந்தாம் தேதி விடுமுறைக்கு இந்தியா செல்லும் ஆறுபேர் கொண்ட குழுவில் என் பெயரும் இருந்தது. தாயகம் செல்லவிருக்கிறேன் என்ற உற்சாக மனநிலையில் கடைசி  பத்து நாட்கள் மகிழ்ச்சியாக சென்றது. ரமலான் நோன்பு வைக்கும் நண்பர்களை, தினமும் அதிகாலையில் சாப்பிட  எழுப்பி விடும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.  மூன்று மணிக்கு எழுந்து இருட்டில் மென்குளிரில் வேறு வேறு அறைகளில் இருக்கும் நண்பர்களின் படுக்கையை கண்டுபிடித்து எழுப்புவேன்.
 
அறையில் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் மற்றவர்களின் துயில் கலையாமல்  அதைச் செய்யவேண்டும். கலீல் பாயை எழுப்புவது எளிது. உடலில் லேசாக கைபட்டதா  என உணர்வதற்குள் அவர் எழுந்து  சலாம் சொல்வார். ரோஷன், அயூப் மற்றும் சிலரை சில வினாடிகள் மெதுவாக தட்டினால் எழுந்துவிடுவர். ஜின்னா  பாஷா என்பவனை எழுப்புவது மிகக் கடினம்,  உடலில் தட்டியும், அடித்தும் படுக்கையிலிருந்து தூக்கி அவனை உட்கார வைத்தால்,  “ஆம்,  இதோ வருகிறேன்”  என்பான். கழிப்பறை சென்று, கை கால் கழுவி, ஆடை மாற்றி  உணவுக்கூடத்திற்குச் செல்லும்போது அவனது அறையை பார்த்தால்  தூங்கிக்கொண்டிருப்பான். மீண்டும் எழுப்பி நேரம் ஆகிவிட்டது சீக்கிரம் வா என நாங்கள் சாப்பிட செல்வோம். இரவு பணியிலிருக்கும் இஸ்லாமிய நண்பர்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலையில்   அரிசி சாதமும்,  பருப்பும் செய்து எங்களுடன் இணைந்து கொள்வர் .
 
 மாலையில்  நோன்பு திறக்கும் நேரம், நோன்பிருக்கும் சில ராணுவ வீரர்களும் எங்களுடன் இணைந்து கொள்வர். உள்ளூர் ஈராக்கி தந்த அவனுடைய வீட்டு பேரீச்சம் மரத்தில் காய்த்த பேரீச்சம்பழமும், துண்டுகளாக நறுக்கிய ஆப்பிள்,  தர்பூசணிபழம், ஆப்பிள் அல்லது மாம்பழ பழச்சாறும் ஏதாவது ஒரு வகை கேக்கும் வைத்திருப்போம். பதின்மூன்று  முதல் பதினான்கு  மணிநேரம் சொட்டு நீர் கூட அருந்தாமல் இருந்துவிட்டு, நோன்பு திறந்ததும், எதுவும் சாப்பிடமுடியாது. ஒரு பேரீச்சை, சில பழத்துண்டுகள், ஒரு டம்ளர் பழச்சாறு, அல்லது நீர் அருந்தினால் வயிறு நிரம்பிவிடும். உடல் மீண்டும், மீண்டும் தண்ணீரையே கேட்கும். மாலை நேர தொழுகைக்குப்பின் இரவில் எட்டு மணிக்குத்தான் இரவுணவு சாப்பிடுவோம் .
 
ரமலானில் ஒரு நாள் பகல் பொழுதில்,  அமெரிக்க ராணுவ வீராங்கனை லிலானியை உணவுக்கூடத்திற்கு வெளியே சந்தித்தேன். மதிய உணவு முடிந்து வெளியே உள்ள மரநிழலில் உள்ள மரநாற்காலியில் அமர்ந்திருந்தாள். கையில் சுவையான கோல்டு கோன் ஐஸ்கிரீம்  இருந்தது. என்னைக் கண்டதும் ஐஸ்கிரீமை மறைத்துவிட்டு “ஹாய்” என்றாள். “ஹாய்,  லிலானி நலமா?” எனக் கேட்டேன். “மிக்க நலம், ஷாகுல். உங்கள் நோன்பு காலம் தொடங்கிவிட்டதே, நீ நோன்பிருக்கிறாயா?” எனக் கேட்டாள்.
 
“ஆம், நீ ஏன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டாய்? நீ சாப்பிடு!” என்றேன். எங்கள் மூத்த அதிகாரிகள் ரமலான் துவங்கிய அன்றே எங்கள் அனைவரிடமும் “இந்த ஒரு மாதம் இஸ்லாமியர்கள் பகலில் நோன்பிருப்பார்கள் .அதனால் அவர்கள் முன்பு உண்பதையும், பருகுவதையும் நீங்கள் தவிர்க்கவேண்டுமென சொல்லியுள்ளார்கள்” என சொல்லிவிட்டு கையிலிருந்த ஐஸ்கிரீமைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு “நான் பின்னர் வேறு ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொள்கிறேன்” என்றாள். எவ்வளவு உயர்ந்த பண்பு அவர்களுடையது என எண்ணிக் கொண்டேன். பிறர் மனம் நோகாமல் நடந்து கொள்ளுங்கள் என ஆட்சியிலும், அதிகாரத்திலுமிருப்பவர்கள் கீழ் பதவியிலிருப்பவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். நான் பார்த்த பெரும்பான்மை ராணுவ வீரர்கள் இன, மத, மொழி வேறுபாடின்றி பழகுபவர்கள். பிறரை தன்னைப்போலவே சமமாக கருதுபவர்கள். “நீ எப்போது ஊருக்குப் போகிறாய்” எனக்கேட்டு என்னுடன் நீண்ட நேரம் உரையாடிவிட்டு  “நீ திருமணம் செய்யும் பெண்ணுடன் பேசினாயா?” எனக் கேட்டாள்.
 
 பின்பு  லிலானி தன் சட்டைப்பையிலிருந்து  பத்து நிமிட மதிப்பு கொண்ட இரு தொலைபேசி அட்டைகளை தந்து “உன் பெண்ணிடம் பேசு” என அழகிய வெண்பற்கள் தெரிய புன்னகைத்தாள். “உங்கள் ஊர் ,பெற்றோர் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீ திருமணத்திற்கு முன் பெண்ணை சந்திக்க முடியுமா?” எனக் கேட்டாள்.  “ஆம், நான் ஊர் சென்றதும் பார்ப்பேன்” என்றேன்.

 

 

 

 

 


 
லிலானி  நான் முகாமிலிருந்த கடைசி நான்கு மாதங்கள் என்னுடன் நல்ல நட்புடன் பழகியவள். இந்தியக் கலாச்சாரத்தின் மீதும், இந்தியாவின் மீதும் பெரும் மதிப்புக் கொண்டிருந்தாள். நம்மைப் பற்றியும் நம் நாட்டைப் பற்றியும் நிறைய அவர்கள் படிக்கிறார்கள் என தெரிந்து கொண்டேன். லிலானி பதவி உயர்வு கிடைத்து தோள்பட்டையில் நட்சத்திரம் பதிக்கும் (piping ceremony ) விழா மனமகிழ் மன்றத்தில் நடந்தது. என்னை அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தாள். அன்று பணி காரணமாக என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.
 
அக்டோபர் மாதம் இருபத்திநான்காம்  தேதி காலையிலேயே முருகன் “பாய் இன்னைக்கு கடைசிநாள்,  கவனமா வேலைசெய்”  என்றான் .  மறுநாள்  ஊர் செல்கிறேன் என்ற உற்சாகம் காலையிலேயே தொற்றிக்கொண்டது. தெரிந்த அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டேன். கலீல் பாயும், கிருஷ்ணமூர்த்தியும் வீட்டிற்கு அனுப்ப பணம் தந்தனர். துறையூர் விஜயகுமார் பணமும், மலிவு விலையில் வாங்கிய பனிரெண்டு பனியன்களும் தந்து வீட்டிற்கு அனுப்பி வைக்க சொன்னான். என்னிடம் நான் உபயோகித்த பொருட்கள் மட்டுமே இருந்தன. அதனால் ஒரு பயணப்பையும்,  நண்பர்கள் அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்க தந்த பொருட்களை ஒரு அட்டை பெட்டியிலும் கட்டிக் கொண்டேன் .
 
 மாலை பணி முடிந்து என்னுடன் ஸ்டோர்ஸில்  வேலை செய்த அனைவரிடமும் நன்றி கூறி விடை பெற்றேன். அடுமனையில் உள்ள ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சந்தித்து போய் வருகிறேன் என்றபோது, அனைவரும் என்னை வாழ்த்திவிட்டு காலையில் வண்டி புறப்படும் முன் சந்திக்கிறோம் என்றனர். வீட்டிற்கும் தொலைபேசியில் அழைத்து சொன்னேன். நாளை முகாமிலிருந்து புறப்பட்டு பாக்தாத் செல்வோம். அங்கு சென்றபின்னர் தான் விமான சீட்டு கிடைக்கும். இந்தியா வந்து சேரும் நேரம், நாள் பின்னர் தெரிவிப்பேன் என்றேன்.
 
அன்று இரவு உணவுக்குப்பின் நண்பர்களுடன் வெகுநேரம் பேசிகொண்டிருந்துவிட்டு தாமதமாக தூங்கச் சென்றேன். அதிகாலை மூன்று மணிக்கு கடிகாரம் அழைப்புமணியை ஒலிக்கும் முன்பே எழுந்து நண்பர்களையும் எழுப்பிவிட்டு நோன்பு வைப்பதற்காக சாப்பிட உணவு கூடத்திற்கு சென்றோம். பணியிலிருந்த கதிர் “பாய், ஆம்லெட் போட்டுத் தரவா?” எனக் கேட்டான். “இனி நாம் சந்திப்பது முடியுமா எனத் தெரியாது  அதனால் உன்னை சந்தோஷப்படுத்த இது எனக்கு கடைசி வாய்ப்பு” என்றான். சிரித்துக்கொண்டே “சரி” என்றேன் .
 
 கதிர் அன்புடன் செய்து தந்த சூடான ஆம்லெட்டுடன் உணவைத் தட்டில் எடுத்து வைத்து உணவுக்கூடத்திற்குள்  சென்று  மேஜையில் அமர்ந்து  சாப்பிடத் தொடங்கும்போது,   இரவு பணியில் இருந்த அமெரிக்க பெண்மணி  “இன்று அனைத்து  போக்குவரத்தையும் (சாலை போக்குவரத்து வான்வழிபோக்குவரத்து)  நிறுத்த கிளர்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அதனால் இன்று உங்கள் பயணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது” என்றாள் .
 
அதிகாலையே அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தது அன்று .

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க