பலகை வேர்கள்

0
1189

 

 

 

 

தாவரங்களின் வேர் (Root ) என்பது, நிலத்துக்குக் கீழ் காணப்படும் பச்சையமில்லாத பகுதி ஆகும். வேர்களுக்கு தாவரத்தை நிலத்துடன் பிணைத்து வைத்திருத்தல், உணவைச் சேமித்தல், நிலத்திலிருந்து நீரையும் கனிமங்களையும் உறிஞ்சி அவற்றை தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துதல் என நான்கு முதன்மையான செயற்பாடுகள் உண்டு. ஆனாலும், எல்லா வேர்களுமே நிலத்துக்குக் கீழ் இருப்பதில்லை. சில தாவர வகைகளில் வேரின் பகுதிகள் நிலத்துக்கு மேலும் வளர்வது உண்டு.

 பண்டைய கட்டிடங்களின் சுவர்களின் அருகில் அவற்றை ஆதரவாக தாங்கிப்பிடிக்க அமை்க்கப்படும் அமைப்புக்கள் Buttress எனப்படும். அதைப்போலவே  சிலவகை மரங்களின் பக்கவாட்டில் வளர்ந்திருக்கும் பலகைகளைபோன்ற அகன்ற பக்கவாட்டு வேர்களுக்கு ‘பட்ரஸ்’ வேர்கள் என்று பெயர் ( Buttressed Roots)

வெப்ப மண்டல, மித வெப்ப மண்டல மழைக்காடுகளில், ஆழமற்ற வேர்களைக் கொண்ட பெருமரங்களின் அடித்தண்டிலிருந்து உருவாகும் மிகப்பெரிய தட்டையான வேர் உதைப்பு வேர் அல்லது பலகை வேர் (Buttress Roots – பட்ரஸ் ரூட்ஸ்) எனப்படும்.

இவை கிளைகள் அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கும் பகுதிக்கு எதிர்ப்புறமாக அமைந்து மரத்திற்கு சமநிலையை ஏற்படுத்துகின்றன.
இந்த வேர்கள், மண்ணைத் துளைத்துக் கீழ் நோக்கியும் பக்கவாட்டிலும் சென்று தாவரங்களை நிலத்துடன் உறுதியாகப் பிணைத்து வைக்கின்றன.

மழைக்காடுகளில் மண்ணின் ஆழத்தில் வளம் குறைவாகவும் மேற்பரப்பில் அதிகப்படியான உணவூட்டம் கிடைப்பதாலும் அவற்றின் வேர்கள் அதிக ஆழத்துக்கு செல்வதில்லை. எனவெ பெருமரங்கள் சரிந்துவிடாமலிருக்க உதைப்பு வேர்கள் மண்ணில் மேற்புறமாகவே பரவி அவற்றை தாங்கிப்பிடிக்கின்றன.

 பலகை வேர்கள் இல்லாத மரங்களின் ஆதார சக்தி (Anchorage Strength – அன்கோரேஜ் ஸ்ட்ரென்த்) 4.9 kNm (Kilo Newton Meter) என்றால் பலகை வேர்கள் உள்ள மரங்களின் ஆதார சக்தி, அதைக்காட்டிலும் இருமடங்காக 10.6 kNm என்ற அளவில் இருக்கும்.

அருகிலுள்ள மரங்களின் வேர்களுடன் உதைப்பு வேர்கள் பின்னிப் பிணைந்து வலை போன்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அருகிலுள்ள மரங்களையும் பாதுகாக்கின்றன. இவை மண்ணுக்கு மேல் 80 அடி தூரமும், 15 அடி உயரமும் மண்ணுக்குக் கீழ் 30 அடி தூரம் வரையிலும் வளரக்கூடியது.

மிகவும் தடித்து உயரமான, நீளம் அதிகமான அலையலையாக படர்ந்தவைகள் என இவற்றில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. மழைக்காடுகளில் இலவம் பஞ்சு, அத்தி, பலா மற்றும் மருத மரங்களில் அதிகமாக இவ்வகை பலகை வேர்கள் காணப்படும்.

பாண்டிச்சேரி தாவரவியல் பூங்காவில் பலகை வேர்களுடனிருக்கும் பல மரங்களை காணலாம். பெங்களூரு லால் பாக்கிலும் பெரும் இலவம்பஞ்சு மரமொன்று பலகை வேர்களுடன் இருக்கும். தாவரவியல் அதிசயங்களில் இவையும் ஒன்று.

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க