செய்தி

0
1084

அன்பே
என் இறப்புச்செய்தி 
உனை வந்தடையுமானால்..

வருந்தாதே!
ஒரு இறகு உதிர்வதற்கு மேல்
ஒரு இலை உதிர்வதற்கு மேல்
அதில்
பெரிதாய் ஒன்றுமே
இல்லை..

இன்னும்..
என் பழைய புகைப்படங்களெதையும்
அவசரமாய் 
கண்டெடுத்து
நீ பார்க்காதிருக்க வேண்டும்..
எனைப்பற்றிய செய்திகளைப்பகிர 
உன் பழைய நண்பர்களை
தேடி நீ செல்லாதிருக்க வேண்டும்..

எல்லாவற்றுக்கும் 
மேலாக..
எனக்காக வருந்தி 
ஒரு பிரிவுக்கவிதையை
நீ எழுதாமல் இருந்திட
வேண்டும்..

அன்பே..
நினைவிலிருத்திக்கொள்;
அன்றைய நாளில்
உதிரும் ஆயிரம் மலர்களில்
நானுமொரு மலர்
என்பதனைத்தவிர
நீ கலங்கவும்
கண்ணீர் சிந்தவும்
வேறேதும் 
காரணங்களில்லை..

எனினும்..
இனி இல்லையென்றான 
ஒரு பொழுதில்..
நினைவுகளால் 
நாம் எவ்வளவு நெருங்கி இருக்கிறோமென்பதை
நீ அறிவாயெனில்
அவ் இறப்புச்செய்தி 
உன்னை 
ஒருபோதும்
பதற்றமடைய செய்யாது!!!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க