சுய இரங்கற்பா

2
1030
IMG_20210108_180622-f08d9ad7

தன்னைத்தானே வாசித்துக்கொள்ளும்
ஒரு வயலின் சிற்பம் கண்டேன்

தனிமையின் அகாலத்தில்
என்னுடன் நான் பேசிக் கொள்வது போல்
எனக்கு நானே ஜோக்குகள் சொல்லிக்கொள்வது போல்
என்னைப்பார்த்து நானே புன்னகைத்துக் கொள்வது போல்
என் தோளில் நானே விழுந்து உடைந்து அழுவது போல்
எனக்கு நானே முடி திருத்திக்கொள்வது போல்
சர்க்கரையில்லாத தேனீரை என்னுடன் நானே அருந்துவது போல்
எனக்காக நானே ஒரு நூடுல்ஸ்
சமைப்பது போல்
என் செருப்பை நானே பழுது பார்ப்பது போல்
அறுந்த என் பொத்தான்களை நானே தைத்துக் கொள்வது போல்
குளியலறையில் தவறி விழும்போது
எனக்கு நானே கைகொடுத்து தூக்குவது போல்
என் அறையை நானே சுத்தம் செய்வது போல்
என் காயங்களை எனக்கு நானே காண்பித்துக் கொள்வது போல்
எனக்கு நானே எழுதிய கடிதத்தை நானே படித்து கண்ணீர்மல்க நெஞ்சோடு அணைத்துக் கொள்வது போல்
என் கண்ணீரை நானே துடைத்துக் கொள்வது போல்
எனக்கு நானே அன்பு செய்வது போல்
என்னை நானே வெறுப்பது போல்
என்னை நானே ஆறத்தழுவி தேற்றுவதுபோல்
ஒருகட்டத்தில்
என்னை நானே கைவிடுவது போல்

அவ்வளவு எளிதல்ல
எனக்கு நானே ஒரு இரங்கற்பா இசைத்துக் கொள்வது..!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
2 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Shafiya Cader
Shafiya Cader
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Very nice
மனுஷ்ய புத்திரனின் கவிதை சாயலை உங்கள் வரிகளில் காண முடிகிறது . தொடர்ந்து எழுதுங்கள்