ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 06

0
872

பக்குபா விமானப்படை முகாமில்

தூசி மிகுந்த பக்குபா முகாமில், இரவில் துயின்று காலையில் விழித்தபோதுதான், குவைத்திலிருந்து புறப்பட்டு மூன்று நாள் பயணத்தில் குளிப்பதை முற்றிலும் மறந்துவிட்டிருந்தோம் என்பதை உணர்ந்தோம்.

எங்களை பாக்தாத்திலிருந்து பக்குபாவிற்கு வழிகாட்டி அழைத்துவந்தவர் தென்னாப்பிரிக்காவின் எட்வர்ட். அவரது தலைமையில் கூடாரம் அமைக்கும் குழு பத்து நாட்களுக்கு முன்பே பக்குபா வந்திருந்தது. எட்வர்ட் எங்களிடம் “நமக்கான குளியலறை தயாராவதற்கு தாமதமாகும். அதுவரையில், இங்கே குளிப்பதற்கு ராணுவ வீரர்களுக்கான குளியல் அறைக்குத்தான் செல்லவேண்டும். தண்ணீர் இருப்பதை பொறுத்து நம்மை அனுமதிப்ப்பார்கள்” என்றார்.

அன்று பின்மாலையில்தான் எங்களுக்கு குளிப்பதற்கான அனுமதியைப் பெற்றுத்தந்தார் எட்வர்ட். “அனைவரும் ஒன்றாக செல்ல இயலாது இன்று உங்களில் பத்து பேர் மட்டும் செல்ல அனுமதி” என்றார். கார்த்திக் “பிரதர், சீக்கிரம் வாங்க” என்றான். மாற்றாடை மற்றும் துடைக்கும் துண்டுகளுடன் ஐந்து நிமிடம் நடக்கும் தொலைவிலுள்ள குளியலறை கூடாரத்தை நோக்கி நடந்தோம். நான் கார்த்திக்கிடம் “நாங்கோ சின்னபுள்ளைல வள்ளியாத்துல குளிக்க இப்படித்தான் செல்வோம்”என்றேன். குளியலறையின் உள்ளே சென்றால் முதல் அறையில் துணிகளை அவிழ்த்து வைத்துவிட்டு, பின் உள் அறைகளில் சென்று குளிக்க வேண்டும். ஆடை மாற்றும் முதல் அறையில் இரு ஆளுயரக் கண்ணாடிகள் இருந்தன. உள் அறையில் எதிரெதில் திசைகளில் ஆறு பேர் வீதம் குளிக்கும் அறைகள் இருந்தன. தண்ணீர்க் குழாயை திறந்தபின் மறைத்துக்கொள்ள கதவோ , திரைச் சீலையோ இல்லை. அருகிலேயே ராணுவ வீராங்கனைகளுக்கான குளிக்கும் கூடாரமும் இருந்தது.

மூன்றாம் நாள் காலையில் அறிமுக உரையுடன் ஒரு கூட்டம். தினமும் கூட்டம் நடத்தாமல் எந்த வேலையையும் அவர்கள் துவங்குவதில்லை. தவறுகளும், புரிந்துகொள்ளாமையும் அதனால் பெரும்பாலும் தவிர்க்கபடுகிறது.

 

 

 

 

 

பக்குபா உணவுக்கூடத்தின் தலைமை அதிகாரியான இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ரஸ்ஸல் அவர்களும், நியுசிலாந்து நாட்டு இரு துணையதிகாரிகளும் வந்திருந்தனர். ரஸ்ஸல் எங்களிடம் “இங்கே உணவு கூடம் மற்றும் அடுமனைக்கான பெரிய கூடாரம் தயாராகும் வரை நாம் கூடாரம் அமைக்கும் குழுவினருடன் வேலை செய்ய வேண்டும். கூடாரம் தயாரானதும் நமது பணிகள் துவங்கும். இங்கு தினமும் ,காலை ,மதியம் ,இரவு என எட்டாயிரம் உணவு வழங்கபட வேண்டியிருக்கும்” என்றார். பின் அவரே தரையில் பதிக்கும் முதல் பலகையை எடுத்து வைத்து அடுமனை மற்றும் உணவுகூடத்திற்கான பணியை துவக்கிவைத்தார். தரைப்பலகை எடை குறைவான பக்கவாட்டில் ஒன்றையொன்று கவ்வி நழுவி செல்லும் வடிவில் இருந்தது. ஜூன் மாதத்தின் இறுதி அது. ஈராக்கின் கோடை துவங்கியிருந்தது. வானேமே கூரையாக சுட்டெரிக்கும் வெயிலில் வேறு வழியின்று பழக்கமில்லாத வேலைக்கு தள்ளப்பட்டோம் .

இரு நாட்களுக்குப் பின் எங்களுக்கு பொருட்கள் வைக்க, தகர அலமாரிக்கான பாகங்கள் வந்தன. ரஸ்ஸல் எங்கள் அனைவரையும் அழைத்து “மொத்தம் நூறு அலமாரிகள் வந்துள்ளன. யாருக்காவது இதை ஒன்றிணைக்க தெரியுமா?”எனக் கேட்டார். நான் அத்துடன் இணைந்திருந்த ஒன்றிணைக்கும் படத்தை வாங்கிப் பார்த்தேன். எளிதாக இருந்தது. “நான் செய்கிறேன்” என்றேன். “சரி, பீட்டரை உதவிக்கு வைத்துக்கொள்” என்றார் ரஸ்ஸல். தங்கும் கூடாரத்திற்குள்ளேயே அதை ஒன்றிணைப்பேன்.அதனால் நானும் பீட்டரும் வெயிலில் கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவிலிருந்து தப்பித்தோம். முதல் நாள் நான்கு அலமாரிகள் மட்டுமே செய்ய முடிந்தது .

இரண்டாம் நாள் இரவில், கூடாரத்தினுள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தபோது, எங்களருகிலேயே குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்டது. அனைவரும் ஓடி வெளியே வந்தோம் . கான்கீரீட்டால் ஆன ஒரு அடி கனமுள்ள பங்கர் எனப்படும் சுவருக்குள் அனைவரும் சென்று பதுங்கி கொண்டோம். எங்களில் பலருக்கு அதுதான் முதல் முதலாக மிக அருகில் பெரும் சத்தத்துடன் பொழிந்த குண்டுமழை. பலருக்கு சில வினாடிகள் மூச்சு நின்றுபோனது .சற்று நேரத்திற்குப்பின் “ஹெட் கவுன்ட்” என்றார்கள். ஒன்,டூ ,த்ரீ என்றோம். அனைவரும் இருப்பதை உறுதிசெய்தபின் “பேக் டு ஸ்லீப்”என்றார்கள்.

மீண்டும் கூடாரத்திற்குள் சென்று கண் மூடி படுத்திருந்தோம். துயில்களைந்த இரவு அது. விடிந்தபின்னர் முந்தைய இரவின் குண்டுவெடிப்பைப்பற்றியே அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

பக்குபாவில் எங்கள் முகாமை நோக்கித் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்துகொண்டே இருந்தது. பகல் வேளைகளில் குண்டுகள் வெடிக்கும்போது பணியில் எங்கிருந்தாலும் விரைந்து பங்கர் பாதுகாப்புச் சுவற்றுக்குள் விரைந்துசெல்ல அனைவரும் பழகிவிட்டிருந்தனர். இரவில் “பேக் டு ஸ்லீப்”என்றால் பகலில் “பேக் டு வொர்க்” என்றார்கள். இப்போதெல்லாம் இரவில் குண்டு வெடிக்கும்போது நண்பன் கார்த்திக் பங்கர் பாதுகாப்பு சுவருக்கு வருவதே இல்லை. தினமும் மிக அருகிலேயே பெரும் சப்தத்துடன் குண்டுகள் வெடிப்பது இயல்பாகிவிட்டது.

 

 

 

 

 

இங்கு வந்த பத்து நாட்களுக்குள் பாதிப்பேர் இங்கு வேலை செய்ய முடியாது. உயிருக்கு உத்திரவாதமிலாத இந்த வேலை எங்களுக்கு தேவையில்லை, எங்களை இந்தியாவிற்கு அனுப்பிவிடுங்கள் என முறையிட்டனர். வேலைக்கு வரவும் மறுத்து விட்டனர். அடுத்த சில நாட்களில் அவர்களை முகாமிலிருந்து அழைத்துச் சென்றனர். குவைத்திலிருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதாக அழைத்துச் சென்றனர். அதற்கும் ஒரு வாரத்திற்கு முன்பே இரண்டு நியூசிலாந்து அதிகாரிகளும் பணியை விட்டுச் சென்றிருந்தனர்.

எங்களுக்கு குளிக்கவும், மற்ற தேவைகளுக்குமான தண்ணீரை, முகாமுக்கு வெளியிலிருந்து தண்ணீர் லாரிகளில் ராணுவத்தினர் கொண்டுவருவார்கள். முகாமிற்கு வெளியே கடும் தாக்குதல் நடந்துகொண்டிருந்தது. ஆகவே, பாதுகாப்பு காரணக்களுக்காக, தண்ணீர் எடுத்து வர, ராணுவம் முகாமை விட்டு வெளியே செல்லவே இல்லை. நான் என் வாழ்வில், பனிரெண்டு நாட்கள் குளிக்காமல் இருந்ததும் அங்கேதான். நல்ல வேளையாக குடிநீர் போத்தல்கள் மட்டும் தேவைக்கு அதிமாக இருந்தது.

குளிரூட்டி வசதியுடைய கூடாரத்திற்குள், நான் , தகர அலமாரி செய்து கொண்டிருந்தேன். சட்டை அணிவதே இல்லை. இடையை மறைக்கும் அரைக்கால் சட்டை மட்டுமே அணிந்து வெற்றுடலுடன் பணி செய்தேன். இப்போது நாள் ஒன்றுக்கு ஆறு முதல் எட்டு அலமாரிகள் வரை செய்யப் பழகி விட்டேன் .

தண்ணீர் இல்லாததால் யாருக்கும் ஆடைகளை துவைக்கவும் இயலவில்லை . “ஜட்டி எல்லாம் அலசாம போடமுடியாது . மூணு நாளா ஒரே ஜட்டி தான் போட்டுருக்கேன் எல்லாம் அழுக்காயாச்சி, போய் கேப்போம் வா” என மேற்பார்வையாளர் ரோகனுடன் சென்றோம் . உள்ளாடைகளைத் துவைக்காமல் அணிய முடியாது என ரஸ்ஸலிடம் கேட்டோம். அவர் ஆளுக்கு மூன்று வீதம் குடிநீர் போத்தல்கள் தந்தார். உள்ளாடை மட்டும் துவைக்க,நான்கரை லிட்டர் தண்ணீர். தண்ணீர் போத்தல் வரும் அட்டைப் பெட்டியில் பாலிதீன் பையை போட்டு துவைப்பதற்கான வாளியாக மாற்றி அதில் உள்ளாடைகளைத் துவைத்தோம் .

 

 

 

 

 

கழிப்பறையை சுத்தம் செய்யும் வண்டியும் பனிரெண்டு தினங்களாக வரவில்லை. உடன் வேலைசெய்த மங்களூர்காரர் “நான் இன்னைக்கு பாட்டிலால் குத்தி அமுக்கிட்டாக்கும் காலத்த போனது” என்றார். நல்ல வேளையாக மறுநாள் சுத்தம் செய்யும் வண்டி வந்தது. எல்லோரும் துடைக்கும் மென்தாள் உபயோகித்ததாலும், நிரம்பி வழியும் தருவாயில் நிலைமை சரியானாதாலும் தப்பித்தோம்.ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் கழிப்பறையை அவர்களே சுத்தம் செய்வார்கள். வாரத்தில் மூன்று நாட்கள் கழிப்பறையின் மலம் நிரம்பிய பையை வெளியே வைத்து தீயில் எரிப்பதை பார்த்திருக்கிறேன். சிலநேரம் அழகிய இளம்பெண்கள் அந்தப் பணியை செய்வதுண்டு. அவர்கள் கடைநிலை வீரர் அல்லது வீராங்கனைகளாக இருப்பர்.

ராணுவ வீரர்கள் போர்முனையில் குளிப்பதற்கு கொஞ்சம் தடிமனான ஈரமான (wet tissue paper ) காற்று புகாத பையில் அடைத்து வைத்திருக்கும் மென்தாள்கள் வழங்கப்படுகிறது. இரண்டு கைக்கும் இரண்டு,கால்களுக்கு இரண்டு, கழுத்து முதல் இடுப்பு வரை ஒன்று, இடுப்புக்கு கீழ்ப் பகுதிக்கு ஒன்று அதுதான் அவர்களுக்கு ஒரு நல்ல குளியல் . ஜூலை நான்காம் திகதி அமெரிக்க சுதந்திரதினம். அன்று ராணுவ வீரர்களுக்கு ஒரு வேளை இரவுணவு மட்டும் உணவு வழங்க வேண்டும் என்றனர். எங்களிடம் பெரிதாக எந்த வசதியும் இல்லை. குறைந்தது இரண்டாயிரம் உணவு தயார் செய்யவேண்டும் .

இரண்டு மூன்று மின்சார அடுப்புகள் மட்டும் ராணுவம் ஏற்பாடு செய்து தந்தது. பொருட்கள் ஏற்றிவந்த கண்டெய்னர் லாரிகளை ,குளிர்சாதனப் பெட்டியாக பயன்படுத்தினோம். சமைக்க தெரிந்த வீரர்களும் ,அழகிய இளம் மங்கைகள் சிலரும் எங்களுடன் இணைந்துகொண்டனர். அன்றைய உணவு தயாரிப்பிற்கு . மிகுந்த சிரமத்திற்கு பிறகு ஜூலை நான்காம் தியதி இரண்டாயிரம் பேருக்கு ஒருவேளை உணவு கொடுத்தோம். புத்தம் புதிய தங்களின் விருப்ப உணவுகளை உண்ட நிறைவு அவர்களின் முகங்களில் வெளிப்பட்டது. சில வீரர்களும், வீராங்கனைகளும் கட்டியணைத்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு சுவையான உணவு தந்தமைக்கு நன்றி என்றனர். “மிகக் குறைவான அடுமனை தளவாடங்களுடன் இத்தனை பேருக்கு சமைப்பது எளிதல்ல, உங்கள் கடின உழைப்பை பாராட்டுகிறோம். விரைவில் அடுமனை பணி முடிந்து, உங்கள் கையால் உணவுண்ண காத்திருக்கிறோம்” எனக் கூறிச் சென்றனர்.

தொடரும்….

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க