அம்மா போடு!

பிதிர்யாண மார்க்கத்தில் என் பிணிதீர்க்க வருபவளே
என்ன பெத்தவளே உன் பெருமையின்னும்
ஒத்தவரி எழுதலையே
…………………

பேப்பரில என் படத்தை பார்த்தொருவர் சொன்னவுடன்
எனக்கு பயந்தபய என்னத்தையோ எழுதிப்புட்டான்
இனி இவன எழுதவைக்க எவள்தான் பொறப்பாளோ
என்று நீ ஏசியது இன்னும் வலிக்கிறது
……………………..
சாவி-வயதான இருபத்தொன்னில் என்னைப் பெத்து
உன் சாவு வரும்வரை எனைத்தாங்கி முடித்தவளே
ஒம் பேரு மீனாவ என் பொண்ணுக்கும் வச்சவுடன்
ஏண்டா கிறுக்கா இதையெல்லாம் செஞ்சுப்புட்ட
……………………
அவ இங்கிலிசு பேசப்போறா – என் பேரு சரிவருமா
என்று நீ சொன்னபோது நானுந்தான் நடுங்கிப்போனேன்
…………………
ஆனாலும் உன்பேத்தி- எங்கெங்கும் இந்நாளில்
சைவத் தமிழ்பத்தி தைரியமா இங்கிலிசில்
தரணியெங்கும் பேசும்போது
முறத்தால் புலிவெரட்டும் உன் குலப்பெருமை தெரிக்கின்றது.
………………………
பன்னெண்டு முடிந்தெனக்கு பதின்மூணு தொடங்கும் அன்று
அத்தனை பெண்களையும் இனி அம்மானு அழைடா என்று
என் அரும்பு மீசை குறும்புக்கு ஒரு ஆப்பு அடித்தவளே
……………………
அந்த ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபத்தி ரெண்டாம் ஆண்டு
அம்மாக்கள் ஆயிரங்கள் ஆயிரம் பல்லாயிரங்கள்
அடுக்கடுக்காய் பிறந்தார்கள் , அன்பினைப் பொழிந்தார்கள்.
………….
(இன்றெனக்கு )
பெத்தவளும் அம்மாதான் , எனக்குப் பொறந்தவளும் அம்மாதான்
அக்காவும் அம்மாதான் , அத்தையும் அம்மாதான்
மாமியும் அம்மாதான் , என் மருமகளும் அம்மாதான்
………………….
எஜமானியும் அம்மாதான் – எடுபிடியும் அம்மாதான்
சிநேகிதியும் அம்மாதான் , மாணவியும் அம்மாதான்
என் பாட்டிகளும் அம்மாதான் பேத்திகளும் அம்மாதான்
தங்கச்சியும் அம்மாதான் – தாரம் அவளும் அம்மாதான்

முந்தைய கட்டுரைநினைவெல்லாம் நீயடா……!
அடுத்த கட்டுரைOpen/Limited Competitive Examination for Recruitment to Grade III of The Sri Lanka Accountants’ Service -2017/2018 *Closing Date: 2019-09-02*
User Avatar
எனது பெயர் இராஜேந்திரநாத் கொட்வின்-சாமுவேல். ஏழுகழுதை வயதையும் என்றோ தாண்டிய ஒரு கொள்ளுத்தாத்தா நான். என்னை. எழுத்தாளன் (Writer) என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் எனது எழுத்தாள நண்பர்கள் கொஞ்சம் நமுட்டாக சிரித்துக் கொள்வார்கள். அதனால் எனது பேத்தி பேரன்களின் திருப்திக்காக 'கதைசொல்பவன்' Story Teller என்று மட்டும் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். ( எனது வீட்டுக்காரம்மா என்னை 'கதை-விடுபவன்' என்பார்கள்! ) பதினைந்து வருடங்களுக்கு முன் உலகத்தின் முதல்; இயற்தேயிலை நிறுவனத்தில் சமூகஅபிவிருத்தி அதிகாரியாக சம்பளத்திற்கு வேலைப்பார்த்தவன் என்ற பெருமை எனக்குள் உண்டு சிலகாலம் இலங்கை மனநோயாளர்கள் அரச நிறுவகத்தில் பகுதிநேர ஆற்றுப்படுத்துனராக பணிபுரிந்தும் எனது கிறுக்குத்தனத்தை வீட்டுக்காரம்மாவுக்கு நிரூபித்துள்ளேன். வெள்ளைக்காரர்களுக்கு அடங்கி வேலைப் பார்த்த எங்களைப் போன்ற 'தோட்டக்காட்டான்களுக்கு' இருக்கும் ஒரு பலகீனம் எனக்கும் அதிகமாகவே உள்ளது அது மனவோட்டங்களை ஆங்கிலத்தில் நினைத்து அவற்றினை முக்கால்வாசி தமிழிலும் முடிந்தால் மிகுதியை சிங்களத்திலும் சொற்களாக வெளிக்கொணரும் தடுமாற்றம்-சாமர்த்தியம் எனக்கும் இருக்கின்றது. ( எனவே கிறுக்கல்களை சகித்துக்கொள்வது வாசகர்களின் விதி ) நான் ஒரு Typical ஊர்சுற்றி. இலங்கை முழுவதும் மட்டுமல்ல ஐரோப்பா, ஆபிரிக்கா என்றும் ஒரு 'கால்' பார்த்திருக்கின்றேன். சிறுவயது முதலே எனது இளம்வயது விதவைத் தாய்க்கு அடங்கிய அம்மாகோண்டு நான். எனது அம்மா மீனா கிழித்த கோட்டைத் தாண்டமாட்டேன். அந்த படிதாண்டா குணம் எனது துணைவியாக இருக்கும் வீட்டுக்கார அம்மா முதல் மகள்மார், மருமகள், பேத்திகள், அக்கா, தங்கை என்று அனைவருக்கும் இன்றுவரை வசதியாக இருக்கின்றது. ஆக ஒரு Model Henpecked சேவல் நான். நான் ஜென் பௌத்தத்தை கடைபிடிக்கும் ஒரு சைவக்கிறிஸ்தவன் சூபி இஸ்லாமிய கீர்த்தனைகள் மிகவும் பிடிக்கும். காயத்ரிசித்தர் ஸ்ரீ முருகேசு மஹரிஷியின் வரலாற்றினை எனது குருவும் எசமானனுமாகிய லெப்டினன்ட் கர்னல் ஜெயக்குமார் அவர்களின் ஆணைப்படி எழுதி புத்தகமாக வெளியிடும் பிராப்தம் எனக்கு கிடைத்தது. காயத்ரி-சித்தம் என்ற ஆன்மீக இதழின் ஆசிரியனும் நான்தான் . அறிமுகத் தகவல்கள் கொஞ்சம் ஓவர்தான். ஆனாலும் யாராவது வாசகர், வாசகிகள் சிக்குவார்களா என்று நப்பாசைதான். (இந்த 'பெருசுகள்' ஒருபோதும் உருப்பாடாது என்று நீங்கள் சொல்வது எனது செவிட்டுக் காதில் விழுகிறது. ஏனென்றால் ஐம்பது வருடங்களுக்கு முன் இதே வார்த்தைகளை நாங்களும் சொன்னோம்.)
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க