சமூக ஊடகங்கள் சாபமா? வரமா?

0
6366

ஆதி மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்புக் கொள்ளவும் தகவல்களை தெரிவிக்கவும் பயன்படுத்திய ‘பறை’ ஒலியே இந்த உலகின் முதல் ஊடகமாகும். பின்பு புறாவில் தூது, ஒற்றர்கள் மூலம் செய்தி, அஞ்சல் மூலம் தகவல், தொலைபேசி வழி என கற்காலம் தொடங்கி கணினி காலமான இன்று வரை சமூக ஊடகத்தின் பரிணாமவளர்ச்சி பல கட்டங்களை கடந்து அசாத்திய முன்னேற்றம் பெற்றுள்ளது. அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க இயலாது வாழ்வின் அங்கமாகிவிட்டது. இந்த நிலையில் சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் தாக்கமும் வரமா? சாபமா? என்ற கேள்வி அனுதினமும் பேசுபொருளாகிவிட்டது.

உலகத்தின் எந்த மூலையில உள்ள ஒரு மனிதனும் தன்னுடைய கருத்துக்களை பரிமாறிக் கொள்ள இந்த சமூக ஊடகங்கள் ஏதுவாகின்றது. அண்டை வீட்டு அளவிலும், தெரு நட்புகள் அளவிலும், பாடசாலை மற்றும் கல்லூரி, பணியிடங்கள் அளவிலும் மட்டுமே இருந்த வந்த நம் நட்பு வட்டாரங்கள் இன்று இந்;த சமூக ஊடகங்தளங்களின் வாயிலாக பறந்து விரிந்து உலகம் முழுவதும் தன் நட்பின் பாச வலைகளை வீசியிருக்கின்றது. உலகில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்;குடன் அறிந்து கொள்ளவும் நமது வினாக்களுக்கும் விடையளிக்ககும் அறிவு களஞ்சியமாகவும் திகழ்வது இந்த சமூக ஊடகங்கள் ஆகும்.

பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிரம், வாட்ஸ்அப் போன்ற முன்னோடி சமூக ஊடக தளங்களின் மூலமாக இளைஞர்களின் சிறப்பான பல ஆக்கங்களுக்கு அங்கீகாரம் மிக எளிதாக கிடைக்கின்றது. இந்த தளங்களின் மூலம் இளைஞர்களின் உள்ளார்ந்த திறமைகள் வெளிக்கொணரப்படுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு தங்கள் உலகளாவிய நட்பு வட்டாரங்களால் இடப்படும் குறியீடுகள் மற்றும் விமர்சனங்கள் போன்ற ஊக்க மருந்துகளால் இன்றைய இளைய தலைமுறையினரின் பலரை பிரபலமானவர்களின் பட்டியலில் இடம்பெற செய்கின்றது.

பல தவறான முன்னுதாரணங்களையும் தாண்டி இன்று ஒரு தகவல், தெரிந்து கொள்வோம் போன்ற சமூக ஊடகதள பக்கங்கள் சிறப்பான சேவையாற்றி வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். எனினும் இன்றைய சமூகத்தினர் உலகத்தின் அசைவுகளை விரல் நுனியில் அசைபோட, சமூக, ஊடக தளங்களின் வீரியமிக்க பயன்பாடு பெரிதும் உதவிபுரிகின்றது.

உலக மாற்றத்திற்கேற்ப மாறிவரும் மனிதர்கள் மத்தியில் தொழில்நுட்பத்தின் தாக்கம் புதிய பரிணாமத்தை தந்துள்ளதோடு அவைசார்ந்த சாதக, பாதக விடயங்களையும் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றன. கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் இதர விடயங்களின் தளமாக சமூக ஊடகங்கள் இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை எவ்விதத்திலும் கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்து. இவற்றை பயன்படுத்தும் ஒவ்வொரு நபர்களும் சுயபாதுகாப்பையும் சமூக இருப்பபையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

‘காலம் பொன் போன்றது’ என்பார்கள். அவ்வாறு விலைமதிக்க முடியாத நேரங்களை சமூக வலைத்தளங்களில் கணக்கின்றி செலவழிக்கும் நம் இளைய சமுதாயம் மைதான விளையாட்டுக்களையும், இயற்கையை ரசிக்கும் தன்மையையும் அடியோடு மறந்துவிட்டது.


எட்டு வயதுக்கும் குறைவான நம் எதிர்கால தூண்கள்கூட தினமும் இந்த சமூக வலைத்தளங்களில் வீழ்ந்து கிடப்பதும் அதற்கு குடும்பத்தில் அனுமதி அளித்துள்ளதோடு அவர்கள் தொடர்பான அக்கறையின்மையை வெளிக்காட்டுகின்றது. சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால் மனதளவில் அடிமைகளாக சிக்கித் தவிக்கும் இளைஞர்களின் மனநிலை மற்றும் உடல் கூறுகளின் பாதிப்புகள் அதிகமாவதாக மனோதத்துவ நிபுணர்களும், நரம்பியல் வல்லுனர்களும் ஒரு அதிர்ச்சி தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளனர்.

அதாவது சமூக ஊடகங்களில் தரம் குறைந்த முதிர்ச்சியற்ற அவசர விமர்சனங்கள், கருத்துப் பதிவுகள் அமெரிக்கா தொடங்கி உள்ளுர் கந்தசாமி வரை ஈவு இறக்கம் இல்லாமல் விமர்சன கணைகள் வீசப்படுக்pன்றது. குறிப்பாக சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் மூலைமுடுக்குகளை ஊடுருவி இருப்பதால் இதன் தேவை அதிகரித்துக் காணப்படுகின்றது. தங்களை அடையாளப்படுத்துவதற்காக ஒவ்வொருவரும் சமூக வலைத்தளங்களின் அங்கத்தவர்களாக இருப்பதற்கே விரும்புகின்றனர். ஆண், பெண் அடிப்படையிலும் வயது அடிப்படையிலும் எவ்வித மட்டுப்பாடுகளின்றி சமூக வலையத்தளங்களை பாவிப்பது அதன் வேகமான ஆதிக்கத்தை வெளிகாட்டுகின்றது.
சமூக ஊடகங்கள் மனிதரின் நேரத்தை களவாடியது ஒருபுறம் என்றால் அதைக்காட்டிலும் மக்களிடையே இருந்து உணர்வுபூர்வமான பிணைப்பை கொன்று வருகின்றது என்பது வேதனைக்குரிய விடயமாகும். ‘தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்க பக்கத்து வீடானது. பக்கத்து வீடு அமெரிக்காவானது’ என்றோ எங்கோ படித்த கவிதை தான் ஞாபகத்திற்கு வருகின்றது. தேடித் தேடி வாழ்த்து அட்டைகள் வாங்கி, நேரில் சென்று, உளமார வாழ்த்து அன்பை பகிர்ந்து கொண்ட தருணங்கள் மாறி, தன் சொந்த வீட்டில் இருப்பவர்களுக்குகூட சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை ஜீவனின்றி பகிர்கின்றோம். இறந்த நண்பனுக்கு இரங்கல் செய்தியாக ‘May your soul RIP’(Rest In Peace) என பதிவிட்டு அடுத்த வேலையை நோக்கிச் செல்லும் அவலம் அரங்கேறி வருகின்றது. அந்த இறந்த நண்பரின் வீட்டிற்கு செல்லவோ, அவரின் தாய், தந்தைக்கு ஆறுதல் கூறி தேற்றவோ எண்ணம் எழாத அளவிற்கு சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் நீள்கிறது.

100 வருட சினிமா வரலாற்றின் தலை எழுத்தையும் மாற்றி எழுதிக் கொண்டிருக்கின்றது சமூக ஊடகங்களின் வளர்ச்சி. ஒரு சில பேரின் அங்கீகாரம் கிடைக்காமல் வாய்ப்பு தேடி அலைந்து தவித்து திறமையுள்ள கூட்டம் தங்கள் குறும்படப் படைப்புகளை யூடியூபில் பதிவேற்றி நேரடியாக மக்கள் மன்றத்தில் பந்தி வைத்து மிகப் பெரிய வெற்றிகளையும், சாதனைகளையும், வாய்ப்புகளையும் தங்களை தேடிச் வரச் செய்கின்றனர் நம் முதல் தலைமுறை இளைஞர்கள்.

எட்ட இருப்பினும் முகத்தோடு முகம் பார்த்து பேசும் அதிசயங்களையும் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் நண்பர்கள், உறவுகளுடன் தொடர்பில் இருக்கவும் புத்தகம் கையில் கையில் எடுக்காத இளைஞர்களும் நொடிக்கு நொடி உலகின் அசைவுகளை விளங்கிக்கொள்ள செய்வது என இதன் பயன்கள் எல்லையற்றது. இத்தனை பயன்கள் இருக்கும் இத்தகைய சமூக ஊடகங்களில் நேரவிரயம், பாதுகாப்பு இல்லை எனக்கூறி பயன்படுத்தாமல் இருப்பது அல்லது உங்கள் குழந்மைகளை அதில் இருந்து விலக்கி அவசர யுகத்தில் நிகழும் ஓட்டப் பந்தயத்தில் நடந்து சென்று வெற்றி பெற்றுவிடலாம் என நினைப்பது போல் சாத்தியமற்றது.

எது எவ்வாறு இருந்தபோதிலும் சமூக ஊடகத்தளங்களினால் சில பல தீமைகள் இருந்தாலும் மறுக்க முடியாத பல நன்மைளும் உண்டு. ஒட்டுமொத்தமாக சகல தரப்பினர் மற்றும் செயற்பாடுகளில் இதன் ஆதிக்கம் விரைவாக பரவி வருகின்றது. ஆகவே முறையான விதத்தில் கையாள்வதின் ஊடாக சிறந்த பலனை பெற முடியும். சமூக ஊடகங்களின் தீமையை மட்டுமே கண்டு ஒதுங்கக் கூடாது. எந்த ஒரு புதுமையிலும் நாணயத்தின் இருபக்கம் போல நன்மை, தீமை இரண்டும் சேர்ந்தே இருக்கும். பாலையும் நீரையும் பிரித்தறியும் அன்னமாக மாறுங்கள். சமூக வலைத்தளங்கள் அவரவர் பயன்படுத்தும் விதத்தினைப் பொருத்து அதன் ஆதிக்க விளைவுகளை கண்டுக்கொள்ள முடியும். ஆகவே இன்றைய சமூகத்தில் சமூக வலைத்தளங்கள் தொலைத்தொடர்பை குக்கிராமமாக மாற்றி பல தேவைகளை பூர்த்தி செய்து பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

முந்தைய கட்டுரைவெந்நீரூற்றுக்களும் பூகம்ப முன்னறிவிப்பும்
அடுத்த கட்டுரைசின்னஞ்சிறு சிட்டு
User Avatar
சி.அருள்நேசன் ஆகிய நான் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் சிறப்புகற்கை இறுதியாண்டு மாணவன். என்னுடைய பள்ளி வாழ்க்கை முதல் கட்டுரை மற்றும் ஊடகம், ஏனைய இதர செயற்பாடுகளில் அதிக அக்கறைக் கொண்டதன் காரணமாகவும் எமது சமூகம் கல்வியால் உயர வேண்டும் என்ற நிலையில் இதுவரையிலும் இலங்கையின் அனைத்து தமிழ் தேசிய பத்திரிகைகள் மற்றும் பிராந்திய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எனது கட்டுரை ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சுமார் 120 மேற்பட்ட கட்டுரைகள் அரசியல், கல்வியியல், சமூகம், மலையகம், பொதுவான விடயங்கள் என்ற வகைகளுக்குள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்பெரும் வகையில் கல்வியியல் கருத்துக்கோவை என்ற நூலை வெளியிட்டேன். மேலும் பல ஆக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். பல மாவட்டங்களில் பாலியல் கல்வி, சிறுவர் உரிமைகள், தொழில் விருத்தி வழிகாட்டல், பெற்றோர்கல்வி, மாணவர் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் செயற்பாடுகள் என்னால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நன்றி
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க