உனக்கென்ன கவலை தம்பி?

0
1341

எரிபொருளாய்ப் பாவிக்கஎண்ணெயுண்டு
எழுதுவதற் குபயோகமாகும் பென்சிற்
கரிசெய்யும் கனிப்பொருள்கள் கட்டித்தங்கம்
கார்டயர்கள் செய்தற்குரப்பர்பாலும்
அரியவிலைமதிப்புள்ள இரத்தினங்கள்
அள்ளியள்ளித்தரும் சுரங்கம் அடியிலுண்டு
உரிய பல வளமெல்லாம் உள்ளபோது
உனக்கென்ன கவலை இங்கு உளது தம்பி?

தேயிலையும் பயன் நல்கும் தென்னந்தோட்டம்
தேடரிய மூலிகைகள் தேக்கு பாலை
காயவிடக்காயவிட உறுதி நல்கும்
கருங்காலி முதிரையுடன் விளினை ராணை
ஆய பல மரவகைகள் அதிகமுண்டு
அவை நமக்கு ஆற்றுபணி அறிந்துள்ளாய் நீ
ஓய ஒரு விருப்பின்றி ஓடியாடி
உழைக்கின்ற உனக்கென்ன கவலை தம்பி?

சுற்றிவரக் கடலுண்டு குளங்கள் ஆறு
சூழ்ந்துள்ள கிராமங்கள் ஊர்களுண்டு!
வற்றாத நீரூற்று மண்ணுமுண்டு
வயல்நிலங்கள் வாய்த்ததுபோல் வேறுவாய்ப்பு
வந்ததில்லை இந்நாட்டில் ஆனால்ஒன்று
செயல்திறமைக் குறைவதனால் இவைகளெல்லாம்
செல்லாக்காசாவதனைச் சிந்திதம்பி!
புயல்போலச் சீறியெழு! போடாதம்பி!
போய்ச்சேரு! உற்பத்திப்போரில் தாவு!!

23-02-1975 இல் இலங்கை வானொலியில் வாலிபவட்டம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது.

முந்தைய கட்டுரைநாளையே எங்கள் நோக்கம்
அடுத்த கட்டுரைபுறப்படு
User Avatar
இலக்கிய, எழுத்துப்பணிகளில் சுமார் 52 வருடங்களாக ஈடுபாடு கொண்ட யான் சமயம்,அரசியல்,சமூகம், இலக்கியம்,கல்வி மற்றும் விஞ்ஞானம், நவீன தொழில்நுட்பம் பற்றிய துறைகளில் கட்டுரைகளையும் கவிதைகளையும் படைத்துள்ளேன். எனது கவிதைகள், இலங்கையின் புகழ்புத்த கவிஞர்களான நீலாவணன், சில்லையூர் செல்வராசன், நாவற்குழியூர் நடராசன், காசி ஆனந்தன் போன்றவர்கள் தலைமையில் கவி அரங்கேற்றம் பெற்றுள்ளன.இலங்கை வானொலியிலும் எனது கவிதைகள் ஒலித்தன. வீரகேசரி, சுதந்திரன், கலைவாணன்,தினகரன் போன்ற பத்திரிகைகளில் எனது கவிதைகளும் கட்டுரைகளும் பிரசுரமாகியுள்ளன. மாற்றம், கிழக்கொளி, இந்து தருமம்,இளங்கதிர் சாயிமார்க்கம், யாழோசை, சமாதானம்,நாணோசை, மருதம்,அருந்ததி,தாயக ஒலி போன்ற சஞ்சிகைகள் எனது ஆக்கங்களைப்பிரசுரித்துள்ளன.ஆங்கிலத்திலும் பல கவிதைகளைப்படைத்துள்ளேன். பட்டய இயந்திரப்பொறியியலாளராகிய யான் தொழில்நுட்பம்,விஞ்ஞானம் சார்ந்த கவிதைகளையும், ஆரய்ச்சிக்கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். கவிதைநூல்களையும், தொழில்நுட்ப நூல்களையும் எழுதி ஆவணமாக்கி வைத்துள்ளேன்.அத்துடன் பல கவிதைகளை எனது குரலில் பதிவுசெய்து வைத்துள்ளேன். திருக்குறள்கள் அத்தனையையும் விருத்தப்பாவில் மாற்றி எழுதியுள்ளேன்.வெண்பா,விருத்தப்பா, ஆசிரியப்பா,கட்டளைக்கலித்துறை, குறும்பா வடிவில் கவிதைகளைப்படைக்கிறேன். பாடசாலைக்காலங்களில் தமிழ் ஆங்கில நாடகங்களில் நடித்த அனுபவம் உண்டு. வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளிலும், நாட்டுக்கூத்திலும் பக்கப்பாடகராகப்பங்குபற்றியுள்ளேன். ஆலயங்களில் பஜனைப்பாடகராகவும் இருந்துள்ளேன். முகநூலில் சமூக,சமய, அரசியல், ஒழுக்கவியல் சார்ந்த விடயங்களைத் தொடர்ச்சியாக எழுதிவருகிறேன். சோதிட சாஸ்திரத்திலும் எனக்குப்பரிச்சயம் உண்டு. அக்கரைப்பற்று இராமகிருஷ;ண வித்தியாலயத்திலும், கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்திலும் கல்வி பயின்ற யான் பேராதனைப்பல்கலைக்கழகத்தின் இயந்திரப்பொறியியல் பட்டதாரியாவேன்.இலங்கைப்பொறியியலாளர் சங்கத்தின் பட்டய இயந்திரப்பொறியியலாளராகவும் உள்ளேன். தம்பிலுவில் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணியை ஆரம்பித்த யான், பேராதனைப்பல்கலைக்கழகம், கிழக்குப்பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கைத்திறந்த பல்கலைக்கழகம், இரத்மலானை தொழில்நுட்பப்பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை, இலங்கை சீமெந்துக்கூட்டுத்தாபன காங்கேசன் சீமெந்துத்தொழிற்சாலை என்பவற்றில் இயந்திரப்பொறியியலாளராகவும், யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரி, மட்டக்குளி உயர் தொழில்நுட்பக்கல்லூரி என்பற்றில் வருகை தரு விரிவுரையாளராகவும், பெலவத்தை நிர்மாண இயந்திரோபகரண பயிற்சிநிலையத்தில் செயற்திட்டப் பொறியியலாளராகவும், தேசிய கல்வி நிறுவகத்தின் பொறியியல் தொழில்நுட்பப்பகுதியில் செயற்றிட்ட அதிகாரியாகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். கல்முனை பாண்டிருப்பைப்பிறப்பிடமாகக்கொண்ட மூதறிஞர் சைவப்புலவர் இளைப்பாறிய உதவி அதிபர் சே.சாமித்தம்பி-நாகம்மா தம்பதிகளின் சிரேஷ;ட புத்திரனான யான் சாவகச்சேரியைப்பிறப்பிடமாகக்கொண்ட பாக்கியலட்சுமி அவர்களைத்துணைவியாக வரித்துள்ளேன். யான் மூன்று ஆண் மக்களுக்குத் தந்தையாவேன். (2018-07-15) எமது 35ஆம் ஆண்டு திருமண நிறைவுநாள் என்பது குறிப்பிடத்தக்கது. எனது 'இல்லறவாழ்வு இனிக்குமா? கசக்குமா? ' எனும் நூல் அருந்ததீ நிறுவனத்தினால் கொழும்புத்தமிழ்ச்சங்கத்தில் அன்றைய தினம் வெளியிடப்பட்டது.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க