வாழ்கையெனும் மாயநதி
வனிதையவள் பயணிக்கிறாள்
வழிநெடுகிலே நஞ்சினை கக்க
வரிசையாய் வக்கிரம் பிடித்தோர்
வரையறை மீறாமல்
வழிமுறை தவறாமல்
வாழமுனைகையில் வஞ்சனைக்கு
வடிகால் தேடும் வன்மம்
வன்முறை எனும் பெயரிலே
வதைக்கப்படுகிறாள் சந்தியிலே..
சல்லடையாக்கப்பட்டவளோ
சாக்கடையிலே வீசப்படுகிறாள்..
சதிகார சபல புத்திகாரனை
சட்டமதுவும் சாகடிக்காமல்
சலசலப்பு அடங்கியதும்
சாலையில் நடமாடவிடுகிறது…
சற்றுகாலம் சமூகமதுவும் தூற்றிவிட்டு
சட்டடென மறந்தும் விடுகிறது
சாரல் கீற்று சாய்க்கப்பட்டதினையே..
வேரருக்கப்பட்டவள் வீழ்ந்தாள்
வேலி தகர்த்து எழுந்தாளா..?
வேதனையால் மடிந்தாளா..?
வேறுவிதமாய் சிந்திப்பவர் எவருமில்லை..
வேங்கையாய் சீற்றம் கொண்டு
வேகமாய் நம்மை நாமே
வீரியத்துடன் தேற்றிக்கொண்டு
விருட்சகமாய் எழவேண்டும்..
வீதியில் நடமாடும் செந்நாய் அவன்
வீரமங்கை உன்னை கண்டு
அஞ்சி தெறித்து தூர ஓடவேண்டும்
அக்கினி பறவையாய் பெண்னவள்
அகிலத்தில் வலம் வர துணிந்தால்
அடிமையாக்க என்னும்
ஆணவம் கொண்ட ஆணாதிக்கமும்
அடியோடு அழியும்…
இங்கே பதிவு செய்க
கருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் "Login" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.
0 கருத்துரைகள்